யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், நேற்று ஒரு தொகை லாப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்த அளவில் மட்டுமே சிலிண்டர்கள் கிடைத்ததால், அவற்றைப் பெற மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, பின்னர் முண்டியடித்து பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. பல பகுதிகளில் எரிவாயு இல்லாமல் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், ஈரான் எடுத்துள்ள அதிரடி முடிவுகளின் தாக்கமாக சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயு விலைகள் வேகமாக உயரத் தொடங்கியுள்ளன. ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டதன் காரணமாக கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்ட தடங்கல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சங்கள் விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. மேலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்ரேலில் சில எரிவாயு உற்பத்தி நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை நிலையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
அதேசமயம் ஐரோப்பாவில் குளிர்காலம் முடிவடைந்ததால் எரிவாயு பயன்பாடு குறைந்திருந்தாலும், அங்குள்ள இருப்பு அளவு மிகவும் குறைவாக உள்ளது. எதிர்வரும் கோடை காலத்தில் அந்த இருப்புகளை மீண்டும் நிரப்ப வேண்டிய கட்டாயம் இருப்பதால், தற்போதைய விலை உயர்வு ஐரோப்பிய நாடுகளுக்கும் பெரும் சவாலாக அமையும் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சர்வதேச சந்தையில் நிலவும் இந்த பதற்றமான சூழ்நிலை எதிர்காலத்தில் உள்ளூர் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக