மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் பல இலட்சக்கணக்கான இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பாக அந்தந்த நாடுகளுக்கான இலங்கைத் தூதரகங்கள் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளன.
Lebanon நாட்டில் Hezbollah இலக்குகள் மீது Israel மேற்கொண்டு வரும் பாரிய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, Beirut உள்ளிட்ட பகுதிகளில் தங்கியிருந்த 19 இலங்கையர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
வடக்கு இஸ்ரேல் பகுதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதலில், வீட்டுப்பணிப்பெண்ணாக பணிபுரியும் கடவத்தையைச் சேர்ந்த 43 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் சிறிய அளவில் காயமடைந்துள்ளார்.
அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காயங்கள் பாரதூரமானவை அல்ல என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் Nimal Bandara தெரிவித்துள்ளார்.
அவர் தங்கியிருந்த வீடு சேதமடைந்ததால், தற்போது பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
United Arab Emirates நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களால் அங்குள்ள இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை என தூதுவர் Arusha Cooray தெரிவித்துள்ளார்.
மேலும், Kuwait நாட்டில் அமெரிக்க இராணுவ முகாம்களை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தியபோதிலும், அங்கிருக்கும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என தூதுவர் Laksitha Ratnayake உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கையர்கள் எவருக்கும் காயங்களோ உயிராபத்துகளோ ஏற்படவில்லை என்றும், குவைத் பாதுகாப்பு அதிகாரிகளுடன் தூதரகம் நேரடி தொடர்பில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசர தேவைகளுக்காக விசேட சேவை ஒன்றை தூதரகங்கள் ஆரம்பித்துள்ளன. அப்பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ள இலங்கையர்கள் தமது விமான நிறுவனங்கள் மற்றும் பயண முகவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பான அறிவிப்புகள் தூதரகங்களின் சமூக வலைத்தளப் பக்கங்களில் உடனுக்குடன் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையர்கள் வதந்திகளை நம்பாமல், அந்தந்த நாட்டுத் தூதரகங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஊடகங்கள் வெளியிடும் தகவல்களை மட்டுமே பின்பற்றுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக