தமிழகம் முழுவதும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வு (TN TET) கடந்த நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்தத் தேர்வில் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மட்டுமின்றி, அரசு பணியில் உள்ள ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
இதனிடையே, டெட் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஜனவரி 28ஆம் திகதி அரசாணை ஒன்றை வெளியிட்டார். அதன்படி, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 75 மதிப்பெண்களும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 60 மதிப்பெண்களும் தேர்ச்சிக்குப் போதுமானதாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த புதிய மதிப்பெண் அடிப்படையில் ஜனவரி 30ஆம் திகதி டெட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இந்த முடிவுகளில், நாகை மாவட்டம் வேதாரணயம் அருகே உள்ள தேத்தாக்குடி வடக்கு கிராமத்தைச் சேர்ந்த பூங்குன்றன் (55) மற்றும் அவரது மகன் ராகுல் (27) ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பூங்குன்றன் கீழ்வேளூர் ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் 42 வயதில் டெட் முதல் தாளில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணியில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மகன் ராகுல் பி.இ மற்றும் பி.எட் பட்டங்களை முடித்துள்ளார்.
இந்தாண்டு இருவரும் சேர்ந்து எழுதிய டெட் தேர்வில், தந்தை பூங்குன்றன் 85 மதிப்பெண்களையும், மகன் ராகுல் 86 மதிப்பெண்களையும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தந்தை மற்றும் மகன் இருவரும் ஒரே நேரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றுள்ள சம்பவம், கல்வித் துறையிலும் பொதுமக்களிடையிலும் பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக