முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான வழக்கில் தனது பெயர் இடம்பெற்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை நடிகை ரிது ஆகர்ஷா முற்றாக மறுத்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், அவை தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேர்வின் சில்வாவுக்கு எதிராக 600 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சட்டவிரோத சொத்துக்களை குவித்ததாக குற்றஞ்சாட்டி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கின் நீதிமன்ற ஆவணங்களை மேற்கோள்காட்டி சில ஊடகங்களில் ரிது ஆகர்ஷா என்ற பெயரில் DFCC வங்கி கணக்கிற்கு பணம் வைப்புச் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் DFCC வங்கியில் கணக்கு ஒன்றை பராமரிக்கவில்லை என்றும், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கு இலக்கம் தமக்குச் சொந்தமானதல்ல என்றும் நடிகை ரிது ஆகர்ஷா விளக்கமளித்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் DFCC வங்கியால் வழங்கப்பட்ட கடிதத்தையும் தனது அறிக்கையுடன் இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள 2010 முதல் 2012 வரையிலான காலப்பகுதியில் தாம் பாடசாலை மாணவியாக இருந்ததாகவும், குறித்த குற்றச்சாட்டுகளுக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக