மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் அசாதாரண பாதுகாப்புச் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகம் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
எந்தவொரு ஆபத்தான நிலைமைக்கும் முகங்கொடுக்க இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) முழுமையாகத் தயாராக உள்ளதாகவும், பாதுகாப்பு நிலவரம் குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு அவ்வப்போது மேலதிக அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் வெளியிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏவுகணைத் தாக்குதல் உள்ளிட்ட அவசர நிலைகள் ஏற்பட்டால், அதுகுறித்த தகவல்கள் உடனுக்குடன் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது. அபாய எச்சரிக்கை ஒலி கேட்கப்படும் தருணங்களில், பொதுமக்கள் தாமதமின்றி அருகிலுள்ள பாதுகாப்பு அறைகள் அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தஞ்சம் அடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய பாதுகாப்பற்ற சூழலை கருத்தில் கொண்டு, இன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இலங்கைத் தூதரகம் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரப்பகுதியில் இலங்கையர்கள் தங்களுக்கு தேவையான தூதரக சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், மேலதிக தகவல்களுக்கு தூதரகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக