சர்ச்சைக்குரிய கல்விப் பாடத் தொகுதி தொடர்பில், அதற்காக பயிற்சி பெற்ற ஆசிரியர்களிடமும் வாக்குமூலங்களைப் பெற்று, விசாரணைகளை விரைவில் நிறைவு செய்யுமாறு கங்கொடவில நீதவான் ருவந்திகா மாரசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) உத்தரவிட்டுள்ளார்.
விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தபோதே, நேற்று (30) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட தரம் 6 ஆங்கிலப் பாடத் தொகுதியில், சிறுவர்களுக்குப் பொருத்தமற்ற இணையத்தளமொன்றின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக எழுந்த புகார் தொடர்பில், குற்றப்புலனாய்வு திணைக்களம் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
இது தொடர்பான விடயங்களை குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னதாகவே கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கையிட்டிருந்த நிலையில், நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கமைய விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த தகவல்களை அதன் அதிகாரிகள் நேற்றும் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
வழக்கில் இடையீட்டுத் தரப்பு சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன, குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மந்தகதியில் முன்னெடுத்து வருவதாகக் குற்றம்சாட்டினார். கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அனைவரும் பொறுப்பேற்க வேண்டிய இந்தச் சம்பவத்தில், இரண்டு அதிகாரிகளின் சேவையை மட்டும் இடைநிறுத்தி விவகாரத்தை சாதாரண ஒன்றாகக் காட்ட முயற்சிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சர்ச்சைக்குரிய பாடத் தொகுதியின் 51 மற்றும் 52ஆம் பக்கங்களில் குறித்த இணையத்தளத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக இருந்தும், குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் அந்தப் பக்கங்கள் 47 மற்றும் 48 என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக