இந்த மாதத்தின் முதல் 25 நாட்களில் இலங்கைக்கு மொத்தமாக 2,23,645 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிகார சபை வெளியிட்டுள்ள தகவலின் படி, குறித்த காலப்பகுதியில் ஒரே நாளில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவு செய்யப்பட்ட நாள் ஜனவரி 15 ஆகும். அந்த நாளில் மட்டும் 10,483 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த 25 நாட்களுக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்தியாவிலிருந்து 41,603 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து 22,876 பேர், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 23,329 பேர் மற்றும் ஜெர்மனியிலிருந்து 14,431 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் சுற்றுலாத் துறைக்கு இது ஒரு சாதகமான முன்னேற்றமாக பார்க்கப்படுகின்றது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக