கனடாவின் டொரன்ரோ நகரில் அமைந்துள்ள டூறம் மாநாட்டு மண்டபத்தில் (Durham Convention Centre) ‘எங்கட பெடியள்’ என்ற கருப்பொருளில் மாபெரும் கலை நிகழ்ச்சி ஒன்று அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கையின் வளர்ந்து வரும் இசைக்கலைஞரும் ரெப் பாடகருமான வாகீசன் உள்ளிட்ட குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வும் சிறப்பாக நடத்தப்பட்டது.
மிகவும் நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘வாகீசன் லைவ் இன் டொரன்ரோ’ (Vaheesan Live in Toronto) இசைச் சங்கமம், உலகத் தமிழர்களை இசையாலும் உணர்வாலும் ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக அமைந்திருந்தது. இக்கலைவிழாவில் ‘சிலோன் ராப்’ சொல்லிசைக் கலைஞர்களின் பங்களிப்பும், அவர்களின் ஆழமான தமிழ்ப்பற்றும் பார்வையாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஒன்ராறியோ மாநில சுகாதார இணை அமைச்சரும், ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினருமான விஜய் தணிகாசலம் அவர்கள், சொல்லிசைக் கலைஞர்களை நேரில் பாராட்டி கௌரவித்தார். அத்துடன், ஒவ்வொரு கலைஞரின் தனித்துவத்தை மதிக்கும் வகையில் பெறுமதிமிக்க நூல்களை பரிசாக வழங்கினார்.
நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக, பாடகர் வாகீசனுக்கு ஒரு ‘வேல்’ பரிசாக வழங்கப்பட்டது. வாகீசனை எதிர்காலத்தின் சிறந்த தலைமையை பிரதிநிதித்துவப்படுத்தும் கலைஞராகக் கருதுவதாகவும், அந்த அடையாளமாகவே இந்த வேல் வழங்கப்பட்டதாகவும் நிகழ்வில் குறிப்பிடப்பட்டது.
மேலும், டொரன்ரோவில் அமையவிருக்கும் தமிழ் சமூக மையத்திற்காக ஒரே இரவில் ஒரு மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டது. புலம்பெயர் தமிழ் மக்களால் உலகளாவிய தமிழ்ச் சூழலில் கட்டப்படவுள்ள முதலாவது தமிழ் சமூக மையம் என்பதால், எதிர்கால சந்ததியினருக்கான நிரந்தரமான இடத்தை உருவாக்கும் வரலாற்றுப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற அறைகூவலும் விடுக்கப்பட்டது.
டொரன்ரோ வாழ் தமிழ் மக்களிடையே பெரும் எழுச்சியையும், இளம் சொல்லிசைக் கலைஞர்களுக்கான கௌரவத்தையும் ஒருசேர வெளிப்படுத்திய இந்த விழா, ஒரு வரலாற்று நிகழ்வாகப் பதிவாகியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக