நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய 6 வயது சிறுமி ஒருவர் மூன்று நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தில் கடந்த 26ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ரசுவா மாவட்டத்தில் நடந்த இந்த மீட்பு சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ரசுவா மாவட்டத்தில் ஆயுதக்காவல் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, இடிபாடுகளுக்கு அடியில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மீட்புப் படையினர் உடனடியாக அந்தப் பகுதியைத் தோண்டி தேடியுள்ளனர்.
அப்போது இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 6 வயது சிறுமி உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மூன்று நாட்களாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சிறுமியை மீட்புப் படையினர் பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்துள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுமிக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைக்காக ஹெலிகொப்டர் மூலம் காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுமி மீட்கப்பட்டபோது எடுக்கப்பட்ட காட்சிகளும் வெளியாகியுள்ள நிலையில், அவை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மூன்று நாட்களுக்குப் பின்னர் 6 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் நம்பிக்கையளிக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக