இலங்கையின் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள 22வது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் அரசியல் மற்றும் சட்ட ரீதியான பரபரப்பு அதிகரித்துள்ளது. குறித்த சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இதுவரை 67 விசேட தீர்மான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் ஒன்றுக்கு எதிராக இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல்முறை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் 22வது திருத்தம் தொடர்பான விவகாரம் நாட்டின் அரசியல் மற்றும் சட்டத் துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தாக்கல் செய்யப்பட்டுள்ள 67 மனுக்கள் தொடர்பான பரிசீலனை இன்று (1) முற்பகல் 10 மணிக்கு, உயர் நீதிமன்றத்தின் ஐவர் கொண்ட நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த விசாரணையில், 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் ஏற்பாடுகள் அரசியலமைப்புடன் முரண்படுகின்றனவா என்பது குறித்து நீதிமன்றம் ஆராயவுள்ளது.
குறித்த சட்டமூலம் முழுமையாகவோ அல்லது அதன் சில பகுதிகளாகவோ அரசியலமைப்புக்கு முரணானது என நீதிமன்றம் தீர்மானித்தால், அதனை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை மட்டுமன்றி, தேவையான சந்தர்ப்பத்தில் மக்கள் வாக்கெடுப்பு மூலம் அங்கீகாரம் பெற வேண்டிய நிலை ஏற்படலாம்.
இதனால் இன்று நடைபெறும் உயர் நீதிமன்ற விசாரணை 22வது திருத்தச் சட்டமூலத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய சட்ட நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
67 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் மற்றும் அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஏற்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக