யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்தி தகாத முறைக்குட்படுத்திய குற்றத்திற்காக 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர், வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நிலையில் பொலிஸாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (28) 24 வருட சிறைத்தண்டனை விதித்திருந்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் உத்தரவிட்டிருந்தது. நஷ்டஈட்டை வழங்கத் தவறினால் மேலும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இதையடுத்து மறுநாள் சனிக்கிழமை (29) திடீர் சுகவீனம் ஏற்பட்டதாக தெரிவித்து, சிறைக் காவலர்களின் பாதுகாப்புடன் குறித்த கைதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், நேற்று (31) மதியம் வைத்தியசாலையில் இருந்து அவர் தப்பிச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறைக் காவலர்கள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் விசேட குழுவினர் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த தேடுதல் நடவடிக்கையின் போது இளவாலை பகுதியில் உள்ள பற்றைக்காட்டிற்குள் மறைந்திருந்த கைதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறைக் காவலர்களின் பாதுகாப்பில் இருந்து தப்பிச் சென்றமை தொடர்பிலும் குறித்த நபருக்கு எதிராக தனியான வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக