யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கில் 20 ஏக்கர் அரச காணியை மசாஜ் நிலையம் அமைப்பதற்காக இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான தீர்மானத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 28ஆம் திகதி வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, குறித்த 20 ஏக்கர் நிலப்பரப்பை தனியார் நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வடமராட்சி கிழக்கு பகுதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுடன், பல்வேறு தியாகங்களை சந்தித்த பிரதேசம் என சுட்டிக்காட்டியுள்ள மக்கள், அப்பகுதிக்கு இவ்வாறான மசாஜ் நிலையத் திட்டம் தேவையில்லை என தெரிவித்துள்ளனர்.
அத்துடன், வடமராட்சி கிழக்கில் தற்போதும் பல நூறு குடும்பங்கள் நிரந்தர காணியின்றி வாழ்ந்து வரும் நிலையில், மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரச காணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அதிகாரிகள் ஏன் ஆர்வம் காட்டுகின்றனர் எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், பிரதேசத்தில் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக இளைய தலைமுறையினரை பாதிக்கக்கூடிய பொழுதுபோக்கு நிலையங்களை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், பிரதேச மக்களுக்கு நேரடியாக பயனளிக்காத அபிவிருத்தித் திட்டங்களை முன்மொழிவதை உரிய தரப்பினர் தவிர்த்து, மக்களின் தேவைகள் மற்றும் கருத்துக்களை கருத்தில் கொண்டு எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக