ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் எல் நினோவின் தாக்கம் காரணமாக உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது.
புதிய பிராந்திய மதிப்பீட்டு அறிக்கையொன்றில், இலங்கையில் வழக்கத்தை விட அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் இருப்பதுடன், வெள்ள அபாயமும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், எரிபொருள், உரம் மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட தொடர்ச்சியான பொருளாதார அழுத்தங்களையும் நாடு எதிர்கொள்ள நேரிடலாம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலக உணவுத் திட்டம், ஐ.நா. பெண்கள் அமைப்பு, உலக வானிலை அமைப்பு மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் தொடர்பான ஒருங்கிணைப்பு அலுவலகம் ஆகியவை இணைந்து இந்த மதிப்பீட்டு அறிக்கையை தயாரித்துள்ளன.
ஆசிய பசிபிக் பிராந்தியம் ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல்வேறு ஆபத்துகளை எதிர்கொண்டு வருவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வலுவடைந்து வரும் எல் நினோ நிலைமை, சாதகமான இந்தியப் பெருங்கடல் இருமுனை நிலை மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடியின் தொடர்ச்சியான பொருளாதார தாக்கங்கள் ஆகியவை முக்கிய காரணிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
தற்போதைய எல் நினோ நிலைமை பதிவுகளில் ஒன்றாக வலுவானதாக அமையக்கூடும் என்பதுடன், இது 2027ஆம் ஆண்டு வரையிலும் நீடிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பப்புவா நியூ கினி போன்ற நாடுகளில் வறட்சி அபாயம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ள நிலையில், சராசரியை விட அதிகமான மழைவீழ்ச்சியை எதிர்கொள்ளக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் முக்கியமாக இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய, 2026ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இலங்கையில் சராசரியை விட அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகும் இரண்டாவது இடைப்பருவ காலப்பகுதியில் இந்த ஆபத்து அதிக முக்கியத்துவம் பெறும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொதுவாக நாட்டில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் காலப்பகுதியை தொடர்ந்து ஈசான் பருவமழையும் ஆரம்பமாகும் என்பதால், எதிர்வரும் காலங்களில் அதிக மழை மற்றும் வெள்ள அபாயங்களை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக