நாட்டில் கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் புதிய முறையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
தனியார் வகுப்புகள் உட்பட நாட்டில் கற்பித்தலில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தேசிய கல்விச் சபையின் ஊடாக கற்பித்தல் அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவர் மருத்துவராக பணியாற்றுவதற்கு மருத்துவச் சபையின் அனுமதியும் அங்கீகாரமும் பெறுவது போன்றதொரு நடைமுறையாக இந்த கற்பித்தல் அனுமதிப்பத்திர முறை அமையும் என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேசிய கல்விச் சபையை அமைப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான புதிய சட்டமூலத்தை தயாரிக்கும் பணிகள் தற்போது சட்ட வரைஞர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சட்ட வரைவு தயாரிக்கப்பட்ட பின்னர், அது அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் சட்டம் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்படும் எனவும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த முழுமையான சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகளை நிறைவு செய்து புதிய கற்பித்தல் அனுமதிப்பத்திர முறையை நடைமுறைப்படுத்துவதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக