நுவரெலியா கிரிகோரி ஏரி அருகே குதிரைச் சவாரிக்காக பயன்படுத்தப்பட்ட குதிரைக்குட்டியை தாக்கியதாகக் கூறப்படும் 26 வயது இளைஞர் ஒருவரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த இளைஞர் குதிரைக்குட்டியை கொடூரமாகத் தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டது. இதனையடுத்து பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்து, தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இளைஞரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நுவரெலியாவின் ஸ்திரபெட்டா பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர் எதிர்வரும் 28ஆம் திகதி நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சுற்றுலாத் துறையில் பயன்படுத்தப்படும் விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பில் உரிய அதிகாரிகள் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான குதிரைச் சவாரி போன்ற சுற்றுலா நடவடிக்கைகளில் விலங்குகள் மீது எந்தவிதமான கொடுமையும் இடம்பெறாத வகையில் தெளிவான விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கிரிகோரி ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டப்பூர்வ உரிமங்களின் கீழ் குதிரையேற்ற சேவைகளில் ஈடுபட்டு வரும் சேவையாளர்களும் இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ஒரு நபரின் செயலால் அனைத்து குதிரையேற்ற சேவையாளர்களும் எதிர்மறையாக சித்தரிக்கப்படுவது நியாயமற்றது என தெரிவித்த அவர்கள், உரிமம் பெற்ற குதிரையேற்ற சேவைகளுக்கு விலங்குகளின் ஆரோக்கியம், உணவு, ஓய்வு நேரம் மற்றும் பணிச்சூழல் தொடர்பான தெளிவான தரநிலைகளை அதிகாரிகள் அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக