அமெரிக்கக் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கப் பிரிவான ICE கடந்த ஜூலை மாதத்தில் 49,571 குடியேற்றவாசிகளை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தை பொறுப்பேற்ற பின்னர், ஒரே மாதத்தில் பதிவான அதிகபட்ச குடியேற்றக் கைது நடவடிக்கையாக இது கருதப்படுகின்றது.
கலிபோர்னியா பல்கலைக்கழகங்களின் திட்டத் தரவுகளை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த கைது எண்ணிக்கை 15 சதவீதத்தாலும், பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 70 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளது.
ட்ரம்ப் நிர்வாகம் பதவியேற்ற பின்னர் குடியேற்ற அமுலாக்க அதிகாரிகளுக்கான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையே, கைது நடவடிக்கைகள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.
குறிப்பாக டெக்சாஸ் மற்றும் புளோரிடா மாநிலங்களில் மட்டும் சுமார் 20,000 குடியேற்றவாசிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பொலிஸாரும் குடியேற்ற அமுலாக்க அதிகாரிகளும் இணைந்து செயற்படும் ஒப்பந்தங்கள் மூலம் இந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், புதிய ஆளணி சேர்ப்புத் திட்டத்தின் கீழ் சுமார் 12,000 புதிய அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா முழுவதும் குடியேற்றவாசிகளுக்கு எதிரான அமுலாக்க நடவடிக்கைகள் மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக