நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக உருவானதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்திய மற்றும் சீன எல்லைப் பகுதிக்கு அருகில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பனி மற்றும் பாறைகள் சரிந்து ஆற்றில் விழுந்ததால் நீரோட்டம் தடைபட்டு, பின்னர் பெருமளவிலான நீர் திடீரென பாய்ந்ததே பாரிய வெள்ளப்பெருக்குக்குக் காரணமாக அமைந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் சம்பவத்தினால் பலர் பாதிக்கப்பட்டதுடன், பெருமளவிலான சொத்து மற்றும் உட்கட்டமைப்பு சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையிலும் இதுபோன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக பேராசிரியர் அத்துல சேனாரத்ன எச்சரித்துள்ளார்.
குறிப்பாக, தளர்வான பாறை அடுக்குகள் காணப்படும் மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் போது, அருகிலுள்ள ஆறுகள் மற்றும் ஓடைகள் அடைபடக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு நீர் தேங்கி பின்னர் திடீரென அடைப்பு உடையும் பட்சத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் சேற்றுப் பெருக்கு ஏற்பட்டு பெரும் பேரழிவு உருவாகும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த காலங்களில் நிலச்சரிவு காரணமாக நீர்வழிகள் அடைபட்டு, பின்னர் சேற்றுடன் கூடிய வெள்ளம் குடியிருப்புப் பகுதிகளுக்குள் பாய்ந்த சம்பவங்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற பேரழிவுகளைத் தவிர்ப்பதற்கு, சாதாரண நிலச்சரிவு அபாயப் பகுதிகளை மட்டும் வரைபடமாக்குவது போதுமானதல்ல என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நிலச்சரிவு காரணமாக ஆறுகள் மற்றும் நீர்வழிகள் அடைபட்டு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய பகுதிகளையும் முன்கூட்டியே அடையாளம் கண்டு வரைபடமாக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உரிய முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் அபாய வரைபடங்களை உருவாக்குவதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இதுபோன்ற இயற்கை பேரழிவுகளின் பாதிப்புகளை குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக