அமெரிக்க நீதித் துறை, நாசா, ஃபெடரல் ரிசர்வ் வங்கி மற்றும் அமெரிக்க செனட் சபை உள்ளிட்ட முக்கிய அரசு நிறுவனங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சீன ஹேக்கிங் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முடக்கியுள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
இந்த இணைய ஊடுருவலால் அமெரிக்க நீதித் துறை, சக்திவளத் துறை, சுகாதாரத் துறை, தேசிய சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பல அரசு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த நான்கு தனியார் நிறுவனங்களும் இந்த சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஹேக்கிங் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ‘க்யூஸ்கேன்’ மற்றும் ‘க்யூடிரூட்டர்’ ஆகிய இணையக் கட்டுப்பாட்டு தளங்களின் டொமைன்களை அமெரிக்க நீதித் துறை கைப்பற்றி, அவற்றை செயலிழக்கச் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தது 2018ஆம் ஆண்டு முதல் உலகளாவிய ரீதியில் இந்த இணைய ஊடுருவல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், குறித்த ஹேக்கிங் தளங்களை சீனாவைச் சேர்ந்த ‘நாஞ்சிங் சின்ஜியூவே நெட்வொர்க் டெக்னாலஜி’ நிறுவனம் இயக்கி வந்ததாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், சீனாவின் உளவு அமைப்புகள் மற்றும் மக்கள் விடுதலை இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்களாக இருந்ததாகவும் அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன அரசு அமைப்புகளின் சார்பில் இதுபோன்ற நவீன இணைய ஊடுருவல் நடவடிக்கைகளை தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் முன்னெடுக்கப்படுவதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம் உடனடி பதில் எதனையும் வெளியிடவில்லை. அதேவேளை, சைபர் தாக்குதல்களில் சீன அரசுக்கு தொடர்பு இருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை சீனா தொடர்ச்சியாக மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக