சீனா மற்றும் திபெத் எல்லைகளுக்கு அருகிலுள்ள நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் இதுவரை எந்தவொரு இலங்கையரும் பாதிக்கப்பட்டதாக தகவல் கிடைக்கவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ வெளியிட்டுள்ள தகவலின்படி, வெள்ளப்பெருக்கால் இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இதுவரை எந்தவித தகவலும் பதிவாகவில்லை.
அதேவேளை, நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவில் சுமார் 85 முதல் 100 வரையான இலங்கையர்கள் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா மற்றும் திபெத் எல்லைக்கு அருகிலுள்ள போட் கோஷி ஆற்றுப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கானது, பனிப்பாறைப் பகுதிகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் அதிகளவான நீர்வரத்து காரணமாக ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நேபாள எல்லைப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகளிலிருந்து பனிக்கட்டிகள் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்து, போட் கோஷி ஆற்றின் கிளையாறான லெண்டே கோலா ஆற்றில் அடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து கீழ்நோக்கி பெருமளவு நீர் சீறிப் பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வெள்ளப்பெருக்கினால் ரசுவா மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் உள்ள வீதிகள், பாலங்கள், உள்கட்டமைப்புகள் மற்றும் நீர்மின் திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. போட் கோஷி ஆற்றுக்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையின் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, அண்டை நாடான திபெத்தின் சில பகுதிகளிலும் கடுமையான சேறு சரிவுகள் மற்றும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இயற்கை அனர்த்தத்தில் பலர் உயிரிழந்துள்ளதுடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஏராளமானோர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், தற்போதைய நிலவரப்படி நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் வெள்ளப்பெருக்கினால் எந்தவொரு இலங்கையரும் பாதிக்கப்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக