அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இளைய மகனான பரோன் ட்ரம்பை இலக்காகக் கொண்டு படுகொலைச் சதித்திட்டம் தொடர்பான காணொளி ஒன்று ஈரானிய அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க இரகசிய புலனாய்வு சேவை தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த காணொளியில், 20 வயதுடைய பரோன் ட்ரம்ப் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவரைக் கொல்வதற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் வெகுமதி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு வழங்கப்படும் நபர்களுக்கு எதிராக விடுக்கப்படும் அனைத்து அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமெரிக்க இரகசிய புலனாய்வு சேவையின் பேச்சாளர் நெய்ட் ஹெரிங் தெரிவித்துள்ளார்.
எனினும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பான விபரங்களை பகிரங்கமாக வெளியிட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான பதற்றமான சூழ்நிலை நீடித்து வரும் நிலையில், பரோன் ட்ரம்பை இலக்காகக் கொண்டதாகக் கூறப்படும் இந்த அச்சுறுத்தல் தொடர்பில் அமெரிக்க பாதுகாப்புத் தரப்பினர் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக