முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக வயல் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு சட்டவிரோதமாக உப்பளம் அமைக்கப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெற்றுள்ளது.
இந்த விடயத்தை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார். இதனையடுத்து, கொக்குத்தொடுவாய் பகுதியில் தனியார் வயல் காணிகளை ஆக்கிரமித்து உப்பளம் அமைக்கப்படுவதாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் சஜித் பிரேமதாச, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, வன்னி மாவட்டத்திலோ அல்லது வடமாகாணத்திலோ தனியார் காணிகளை ஆக்கிரமித்து உப்பளங்கள் அமைக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
எனினும், இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுடன் கலந்துரையாடி மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொண்டு, குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் அமைக்கப்பட்டு வரும் உப்பளம் தொடர்பாக கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆகியோரால் உரிய தரப்பினருக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதி தனியார் காணி அல்ல என ஆரம்பத்தில் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினரால் தெரிவிக்கப்பட்ட போதிலும், பின்னர் மாவட்டச் செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நில அளவை நடவடிக்கையில் அது தனியார் காணி என உறுதிப்படுத்தப்பட்டதாக ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, தனியார் காணியில் முன்னெடுக்கப்படும் உப்பளம் அமைக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்துக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரால் கடிதம் அனுப்பப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், குறித்த உத்தரவுகளுக்கு இணங்காமல் மகாவலி அதிகார சபை தொடர்ந்து தன்னிச்சையாக செயற்பட்டு வருவதாகவும், தேவையானால் இந்த விடயத்துக்கான ஆதாரங்களை உரிய தரப்பினரிடம் வழங்கத் தயாராக இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக