உலகளவில் தாக்கம் செலுத்தி வரும் எல் நினோ காலநிலை மாற்றம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் 20 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கணேஷ் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் போக்குவரத்து செலவுகளில் ஏற்படும் தாக்கம் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சர்வதேச சந்தை மாற்றங்களின் தாக்கமாக கடந்த சில நாட்களில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனியின் விலை சுமார் 40 ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும் கணேஷ் விநாயகமூர்த்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து சர்வதேச சந்தையில் நிலவும் நெருக்கடி நீடித்தால், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி செலவுகள் மேலும் அதிகரித்து, அதன் தாக்கம் உள்நாட்டு சந்தை விலைகளிலும் பிரதிபலிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், எதிர்வரும் நாட்களில் அத்தியாவசிய பொருட்களின் விலை நிலவரம் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக