நாட்டில் மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ள நிலையில், தற்போது எந்தவொரு பகுதியிலும் வெள்ள அபாயம் இல்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மைப் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார இன்று காலை இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான அதிகூடிய மழைவீழ்ச்சி களு கங்கை மற்றும் மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பதிவாகியுள்ளதுடன், அங்கு சுமார் 20 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும், மேல், வடமேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் நேற்று மழைவீழ்ச்சி பதிவாகியிருந்த போதிலும், அதன் அளவு குறைவாகவே காணப்பட்டதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளிலும் 10 மில்லிமீற்றருக்கும் குறைவான மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழைவீழ்ச்சி குறைந்துள்ளதால் நாட்டின் முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக அதிகரிப்பது தடுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலவரப்படி எந்தவொரு பகுதியிலும் வெள்ள அபாயம் ஏற்படவில்லை என்றும் பொறியியலாளர் எல். எஸ். சூரியபண்டார உறுதிப்படுத்தியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக