ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை பிணையில் விடுவிக்க கடுவலை நீதவான் அருண புத்ததாச உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கின் சட்ட நடவடிக்கைகளின் போது இரு தரப்பினரும் தங்களது சமர்ப்பணங்களை முன்வைத்த நிலையில், இன்று பிற்பகல் 4.30 மணியளவில் அவை நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பின்னர் இரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்கள் ஆராயப்பட்டு, 17 பக்கங்களைக் கொண்ட பிணை உத்தரவை நீதவான் பிரகடனப்படுத்தியுள்ளார்.
இதன்படி, தலா 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் சாகர காரியவசத்தை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னர் சாகர காரியவசத்தை விடுவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஓகஸ்ட் 3ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பாக சாகர காரியவசம் வெளியிட்ட அறிக்கை குறித்து மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
இதுதொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று முற்பகல் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு சென்ற சாகர காரியவசத்திடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக