இலங்கை மத்திய வங்கி சந்தையில் தொடர்ந்து டொலர்களை வாங்கி வருவதன் காரணமாக, டொலரின் மதிப்பு அதிகரித்து இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதாக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், இதே நிலை நீடித்தால் சந்தையில் டொலரின் மதிப்பு நிச்சயமாக 400 ரூபாயைத் தாண்டும் அபாயம் உள்ளதாகவும், இதனால் மக்களின் வாழ்க்கைச் செலவு மேலும் பலமடங்கு அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.
2027ஆம் ஆண்டிலிருந்து அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துவதற்கு நாட்டிற்கு 11.1 பில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாகவும், ஆனால் தற்போது 5 பில்லியன் டொலர்கள் மட்டுமே கையிருப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மீதித் தொகையைச் சந்தையிலிருந்து திரட்ட மத்திய வங்கி முயல்வதே இந்த நெருக்கடிக்குக் காரணம் எனத் தெரிவித்த அவர், கடனைச் செலுத்த டொலர்களை வாங்கினால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து பொருட்களின் விலை உயரும் என்றும், டொலர்களை வாங்கத் தவறினால் 2027-2029 காலப்பகுதியில் நாடு மீண்டும் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்படும் என்றும் எச்சரித்தார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக