இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டெங்கு நோய்க்கான தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளைச் சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளது. நாட்டில் நிலவும் டெங்கு பரவல் நிலைமை மற்றும் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே, பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள இத்தடுப்பூசியை இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான அனுமதி கோரி ஏற்கனவே கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நடப்பு ஜூலை மாதத்தில் மட்டும் இதுவரை 26,136 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இது இந்த ஆண்டில் ஒரு மாதத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், வரும் ஆகஸ்ட் மாதத்தில் இந்நோயாளர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெங்கு நோய் ஏற்படுவதற்கு முன்னரே இத்தடுப்பூசியைச் செலுத்திக்கொள்வதன் மூலம் பாதுகாப்புப் பெற முடியும் எனக் கூறப்படும் நிலையில், இது புதிய தடுப்பூசி என்பதால் இதன் வெற்றி குறித்த ஆய்வுகளுடன் உலக நாடுகளின் நடைமுறையைப் பின்பற்றி இலங்கையிலும் இதைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக