கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில், தொழிலதிபர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தானும் உயிரை மாய்த்துக் கொண்டதாக சந்தேகிக்கப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த குறித்த தொழிலதிபர், பழைய வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலிலும் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குடும்பத்துடன் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில், அண்மைக்காலமாக தொழிலில் சரிவையும் கடுமையான நிதி நெருக்கடியையும் சந்தித்ததாக கூறப்படுகிறது.
உறவினர்கள் தொலைபேசி மூலம் பலமுறை தொடர்பு கொண்டும் நீண்ட நேரமாக பதில் கிடைக்காததால், அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது தொழிலதிபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வீட்டின் படுக்கையறையில் அவரது மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர். அவர்களின் வாய் மற்றும் மூக்குப் பகுதிகளில் டேப் ஒட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், குடும்பத்தினரை கொலை செய்த பின்னர் தொழிலதிபர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவ இடத்தில் இருந்து தொழிலதிபர் எழுதி வைத்திருந்ததாகக் கூறப்படும் கடிதம் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அந்தக் கடிதத்தில் சொத்து விவரங்கள், கடன்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்ததாகக் கூறப்படும் சொத்துகள் தொடர்பான தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரது இரண்டு சொத்துகள் வங்கிகளால் முடக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனால், கடன் நெருக்கடியை தாங்க முடியாமல் இந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டதா என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேவேளை, நான்கு பேரின் மரணத்திற்குப் பின்னால் வேறு ஏதேனும் காரணங்கள் அல்லது மர்மம் உள்ளதா என்பதையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். சம்பவம் தொடர்பான முழுமையான உண்மைகள் பொலிஸ் விசாரணைகள் நிறைவடைந்த பின்னரே தெரியவரும்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக