ஈரானுடனான அமெரிக்காவின் தற்காலிக ஒப்பந்தம் எப்போதும் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும் என்றும், ஹோர்முஸ் நீரிணையில் பயணிக்கும் கப்பல்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படுத்தப்படக்கூடாது என்பதே அதில் முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாகும் என்றும் நேட்டோவிற்கான அமெரிக்க தூதுவர் மெத்தியூ விட்டேக்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தத்தின் மூலம் தீர்வை எட்ட விரும்புவதாக குறிப்பிட்டார். அதேநேரத்தில், அண்மையில் அமெரிக்கா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகளையும் அவர் நியாயப்படுத்திப் பேசியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை உலகின் முக்கிய கடல்சார் வர்த்தகப் பாதைகளில் ஒன்றாக இருப்பதால், அங்கு பயணிக்கும் சர்வதேச கப்பல்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் அமெரிக்கா மிகவும் உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதை ஈரான் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் சர்வதேச கடல்சார் போக்குவரத்தின் சுதந்திரத்தை பாதுகாப்பது அமெரிக்காவின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக இருப்பதாகவும் மெத்தியூ விட்டேக்கர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக