அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை, மாவெல்ல கடற்பரப்பில் கடல் அலையில் சிக்கி காணாமல் போன 19 வயதுடைய இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் தங்காலை, கொடெல்லவெல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை மாவெல்ல – மஹகலாகாவ கடற்கரைப் பகுதியில் தூண்டில் மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட பலத்த கடல் அலையில் சிக்கி அவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தையடுத்து, காணாமல் போன இளைஞரை தேடும் பணியில் பிரதேச மக்கள், பொலிஸ் உயிர்பாதுகாப்புப் பிரிவு மற்றும் இலங்கை கடற்படையினர் இணைந்து தீவிரமாக ஈடுபட்டிருந்த போதிலும், ஆரம்பத்தில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், நேற்று பிற்பகல் மாவெல்ல கடற்பரப்பில் சடலம் மிதப்பதைக் கண்ட மீனவர்கள், அதை படகின் உதவியுடன் கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக