ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த, நீதித்துறையில் நிலவும் தற்போதைய சூழ்நிலை தொடர்பாக அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அரசமைப்புத் திருத்தம் மூலம் தற்போது பதவியில் உள்ள நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்க அரசாங்கம் மேற்கொள்வதாகக் கூறப்படும் முயற்சி, நீதித்துறையினருக்கு வழங்கப்படும் சலுகையாகப் பார்க்கப்படக்கூடியது என குற்றஞ்சாட்டினார்.
மேலும், புதிய அரசமைப்பை உருவாக்குவதாக அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும், இரண்டு ஆண்டுகள் கடந்தும் அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் கூட முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் பதவிக்காலத்தில் மாற்றம் மேற்கொள்ள வேண்டுமாயின், அது புதிய அரசமைப்பின் ஊடாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், தற்போது பதவியில் உள்ளவர்களின் பதவிக்காலத்தை தனிப்பட்ட முறையில் நீடிப்பது பொருத்தமற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதில் ஏற்பட்டுள்ள தாமதம் நீதித்துறையில் நெருக்கடியை உருவாக்கியுள்ளதாகவும், அதற்கான பொறுப்பை ஜனாதிபதி ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டு வருவது அவசியம் எனவும், நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தின் பின்னணியில் தார்மீகப் பொறுப்பை ஏற்று நீதி அமைச்சர் பதவி விலகி சுயாதீன விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரேம்நாத் சி. தொலவத்த தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக