தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறை விவகாரங்களில் தலையீடு செய்கிறதா என்ற கேள்வியை முன்னாள் ஆளுநரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மைத்திரி குணரத்ன எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கருத்தில், கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதிகள் மீது நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையீடு செய்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், தற்போதைய நிலையைப் போல உயர்நீதிமன்ற நீதியரசர் பதவிகள் நீண்டகாலமாக காலியாக வைக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தற்போது உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் தலா நான்கு நீதியரசர் பதவிகள் காலியாக உள்ளதாகவும், இதன் காரணமாக கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் தங்களுக்கான பதவி உயர்வுகளை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொதுக் கூட்டங்களில் ஜனாதிபதி வெளியிடும் சில கருத்துகளையும் சுட்டிக்காட்டிய அவர், நீதித்துறையின் சுயாதீனத்தன்மை தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் சந்தேகங்கள் உருவாகும் சூழல் காணப்படுவதாக தெரிவித்தார்.
உயர் நீதித்துறை பதவிகள் காலியாக வைக்கப்படுவதன் பின்னணியில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதாகவும், இது குறித்து வெளிப்படைத்தன்மையுடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் தற்போதைய நீதித்துறை நிலைமை குறித்து தனக்கு ஆழ்ந்த கவலை இருப்பதாகவும், நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக