அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்பினரிடமிருந்து அரசாங்கத்திற்கு கிடைத்து வருவதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்று (12) மீரிகம மருத்துவமனையில் புதிய சிறுநீரகக்கல் அகற்றும் சிகிச்சைப் பிரிவை திறந்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தற்போது அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறினார்.
மேல்முறையீட்டு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறை சார்ந்த தரப்புகளிலிருந்தும், சுகாதாரத் துறை மற்றும் சிறைத்துறை உள்ளிட்ட பல்வேறு தொழில்முறை பிரிவுகளிலிருந்தும் இத்தகைய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
சில தொழில்முறை நிபுணர்கள் தங்களது சேவையை நீண்ட காலம் தொடரும் வகையில் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாகவும், அதேவேளை சில தரப்புகள் அதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், அனைத்து தரப்புகளின் கருத்துகளையும் அரசாங்கம் கவனத்தில் கொண்டு, கிடைத்துள்ள கோரிக்கைகளை பரிசீலித்து உரிய முடிவுகளை எடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக