தமிழ் சின்னத்திரை நடிகையும் தொகுப்பாளருமான பரீனா ஆசாத், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்கொண்ட அனுபவங்கள் குறித்து சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான "பாரதி கண்ணம்மா" தொடரில் வெண்பா என்ற கதாபாத்திரத்தின் மூலம் பரவலாக அறிமுகமான பரீனா ஆசாத், அந்தத் தொடரில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே திருமணம் செய்து கொண்டதுடன் பின்னர் ஆண் குழந்தைக்கும் தாயானார். அதன் பின்னரும் சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருந்தாலும், தற்போது நிகழ்ச்சி தொகுப்பு, சிறப்பு நிகழ்வுகள் மற்றும் புகைப்படப் படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
அண்மையில் அளித்த பேட்டியில், தனது குடும்பம் மற்றும் மதம் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்த அவர், தாம் இஸ்லாம் மதத்தில் பிறந்திருந்தாலும், தங்களது குடும்பத்தில் மதம் தொடர்பான விடயங்களை மிகவும் இயல்பாகவே அணுகியதாக தெரிவித்தார்.
மேலும், ஒருமுறை குட்டை உடை அணிந்த தனது புகைப்படம் ஒரு பத்திரிகையில் வெளியானதைத் தொடர்ந்து, அது தொடர்பாக உறவினர்கள் தனது பெற்றோரிடம் கேள்வி எழுப்பி விமர்சித்ததாக கூறினார். அந்தச் சம்பவம் குடும்பத்தில் பேசுபொருளாக மாறியிருந்தாலும், தனது விருப்பத்தை மதித்து பெற்றோர் முழு ஆதரவை வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது விருப்பப்படி எடுத்த முடிவுகளுக்கு பெற்றோர் எப்போதும் உறுதுணையாக இருந்ததாகவும், அதுவே தனக்கு தன்னம்பிக்கையுடன் முன்னேற உதவியதாகவும் பரீனா ஆசாத் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக