நாட்டின் தொழில்முனைவோரை தற்போதைய அரசாங்கம் தவறான வழியில் வழிநடத்தி ஏமாற்றி வருவதாக சர்வஜன பலய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர குற்றம் சுமத்தியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு ஆதரவளித்த பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்புகளும் நிறைவேறவில்லை என்றும், அவர்களும் அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், அரசாங்கம் நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக அளித்த வாக்குறுதிகளை நம்பி மக்கள் அதிகளவில் ஆதரவு வழங்கியதாக குறிப்பிட்டார்.
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், தொழில்முனைவோர் தொடர்ந்தும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
வெற்றிகரமாக செயல்பட்டு வரும் சில உள்ளூர் வணிக நிறுவனங்களுக்கு எதிராக அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நியாயமற்றவை என்றும், அவை தொழில்முனைவோருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் திலித் ஜயவீர சுட்டிக்காட்டினார்.
மேலும், 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா மேற்கொண்ட விசாரணையின் முடிவுகளுக்கு தற்போதைய அரசாங்கம் அளித்துள்ள பதில் ஏமாற்றமளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்தத் தாக்குதலில் அமெரிக்க பிரஜைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா தனிப்பட்ட விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்ததாகவும், அந்த விசாரணையுடன் தொடர்புடைய சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக