சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்களுக்கு திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களுடன் தொடர்புகள் இருப்பதாக விசாரணைகளின் போது தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் லசந்த விக்ரமசேகர, அம்பலாங்கொடை நகர சபையின் முன்னாள் வேட்பாளர் ஹிரான் கோசல மற்றும் கட்சியின் செயற்குழு உறுப்பினர் சரித் அபேசிங்க ஆகியோரின் பெயர்கள் விசாரணைகளில் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
போகம்பரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைபேசியை ஆய்வு செய்தபோது, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் குறித்த சந்தேகநபருக்கு இடையில் 53 தடவைகள் தொலைபேசி உரையாடல்கள் இடம்பெற்றிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சஜித் பிரேமதாசவின் சகோதரி துலாஞ்சலி பிரேமதாச, மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமல் விடுவிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் லசந்த விக்ரமசேகரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மற்றொரு பாதாள உலகக் குழுவினரால் அவர் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அம்பலாங்கொடை நகர சபை வேட்பாளராக இருந்த ஹிரான் கோசல, இரண்டு கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மற்றொரு குற்றக் குழுவினரால் கொலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களின் பின்னணியில், ஐக்கிய மக்கள் சக்தியின் சில முக்கிய உறுப்பினர்களுக்கும் திட்டமிட்ட குற்றக் குழுக்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக