2025/2026 நிதியாண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நிகர நஷ்டம் ரூ. 23.2 பில்லியனாக உயர்ந்துள்ளதாக நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு வெளியிட்ட இறுதி நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, 2024/2025 நிதியாண்டில் ரூ. 7.6 பில்லியனாக இருந்த நிகர நஷ்டம், 2025/2026 நிதியாண்டில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் எரிபொருள் செலவுகள், விமான நிலையக் கட்டணங்கள், பயணிகள் சேவைச் செலவுகள் மற்றும் விமான பராமரிப்புச் செலவுகள் அதிகரித்ததன் காரணமாக, நிறுவனத்தின் மொத்த இயக்கச் செலவு ரூ. 307.1 பில்லியனாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஜெட் எரிபொருளுக்கான செலவு ரூ. 91.7 பில்லியனிலிருந்து ரூ. 96.1 பில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடன் சேவைப் பொறுப்புகள் மற்றும் அந்நிய செலாவணி மாற்று விகிதங்களில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களால் நிறுவனம் தொடர்ந்தும் நிதிசார் அழுத்தங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், குத்தகைக்கு விடப்பட்ட விமானங்களின் வாடகை வருமானம் ரூ. 3.6 பில்லியனிலிருந்து ரூ. 1.9 பில்லியனாக குறைந்துள்ளதாகவும், இருப்பினும் விமான சேவைகள் மூலம் கிடைத்த மொத்த நிகர வருவாய் இந்த ஆண்டில் ரூ. 333.5 பில்லியனாக உயர்ந்துள்ளதாகவும் நிதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக