கடந்த பல மாதங்களாக காணாமல் போயிருந்த பௌத்த துறவியொருவருக்குச் சொந்தமானதாக சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடு ஒன்று திருகோணமலை மாவட்டத்தில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தெபரகல ஆரண்ய சேனாசனத்தில் தங்கியிருந்த பம்பரகல அபயவன்ச தேரரின் எலும்புகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இந்த எலும்புக்கூடு, சேனாசனத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
தேன் சேகரிப்பதற்காக காட்டுக்குச் சென்ற குழுவொன்று முதலில் எலும்புகளை கண்டுபிடித்ததாகவும், பின்னர் அவர்கள் குச்சவெளி பிச்சமல் விகாரையில் வசித்து வரும் கெப்பெட்டியாவே அரண தேரருக்கு தகவல் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் குச்சவெளி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
சம்பவ இடத்தில் காணாமல் போன அபயவன்ச தேரர் பயன்படுத்தியதாகக் கருதப்படும் மூக்குக்கண்ணாடி, சில மருந்துகள் மற்றும் அவரது அங்கியின் பகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆதாரங்களின் அடிப்படையில், கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு காணாமல் போன துறவியுடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
காணாமல் போன அபயவன்ச தேரர், துறவியாக மாறுவதற்கு முன்னர் மேற்கத்திய மருத்துவத் துறையில் பணியாற்றியவராகவும், கடைசியாக கொஸ்கம சாலாவ மருத்துவமனையில் மாவட்ட மருத்துவ அதிகாரியாக சேவையாற்றியவராகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேரர் காணாமல் போனதைத் தொடர்ந்து, இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து ஒரு மாதத்திற்கும் மேலாக தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும், அப்போது எந்த தகவலும் கிடைக்காததால் தேடுதல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தன.
தற்போது எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருகோணமலை பதில் நீதிபதி ஏ.எஸ்.எம். சாஹிர் சம்பவ இடத்துக்கு சென்று ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன், மேலதிக விசாரணை அறிக்கையை குச்சவெளி சுற்றுலா நீதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக