ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவம் கிருஷ்ணா மாவட்டத்தின் கூடூர் மண்டலத்திற்குட்பட்ட அனந்தாயிபேட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்கள் ரஜினி (60), அவரது மகள் கவுரி (40) மற்றும் மருமகள் மதுபாலா (35) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கிடைத்த தகவல்களின் படி, மூவரும் தங்களது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் கூடூர் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று, சடலங்களை மீட்டு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்தனர்.
பின்னர், உயிரிழந்தவர்களின் உடல்கள் மசூலிப்பட்டினம் அரசு வைத்தியசாலைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் உறுதிப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆரம்ப கட்ட விசாரணைகளில், நீண்டகால குடும்பத் தகராறுகள் மற்றும் உள்குடும்ப பிரச்சினைகள் இந்த துயர சம்பவத்திற்கு காரணமாக இருக்கக்கூடும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், இது ஒருங்கிணைந்த தற்கொலையா அல்லது வேறு யாரேனும் தொடர்புடைய கொலைச் சம்பவமா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸார் அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்து கிடைத்த தகவல்கள், குடும்பத்தினரின் வாக்குமூலங்கள், அயலவர்களின் சாட்சியங்கள் மற்றும் தடயவியல் ஆய்வுகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த மர்ம உயிரிழப்பு தொடர்பான முழுமையான உண்மை, பொலிஸ் விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் வெளியாகிய பின்னரே உறுதியாக தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக