இந்தியாவின் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் பகுதியில் ஆறு மாத கர்ப்பிணியான பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அவரது கணவர் மீது கொலை சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பொலிஸார் தெரிவித்த தகவலின்படி, 26 வயதான அமித் குப்தா தனது 23 வயதான மனைவி நேஹா குமாரியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவர் வேலைக்குச் செல்லும் போது, மனைவியை வீட்டிற்குள் பூட்டி வைத்துச் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் நடைபெற்ற நாளன்று, அமித் குப்தா தனது உறவினருக்கு தொலைபேசியில் அழைத்து, மனைவியை கொன்றுவிட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற உறவினர், நேஹா உயிரிழந்த நிலையில் கிடந்ததை அடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, வீட்டிலிருந்த தண்ணீர் நிரப்பப்பட்ட வாளியில் நேஹாவின் முகத்தை அமுக்கி கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உயிரிழந்த பெண்ணின் உடல் உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதுடன், சம்பவத்திற்குப் பின்னர் தலைமறைவான அமித் குப்தாவை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக கணவர் சந்தேகித்ததே இந்தச் சம்பவத்திற்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணையின் அடிப்படையில் தெரிவித்துள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக