தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 வயது சிறுமி ஒருவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் அதிர்ச்சியூட்டும் உண்மை ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குடும்ப உறவுகளுக்குள் ஏற்பட்ட பொறாமை காரணமாக, சிறுமியின் சொந்த அத்தையே அவரை கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் எம்.எஸ்.கே. நகரைச் சேர்ந்த குடும்பத்தில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தன்று, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி திடீரென காணாமல் போனதாக குடும்பத்தினர் தெரிவித்ததையடுத்து, பல இடங்களில் தேடுதல் நடத்தப்பட்டது. பின்னர், வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் சிறுமி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.
ஆரம்பத்தில் இது விபத்தா அல்லது கடத்தல் சம்பவமா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், குடும்ப உறுப்பினர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் பிற தகவல்களின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
விசாரணையின் போது, சிறுமியின் சொந்த அத்தை மீது சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளியாகின. தனது மாமனார் மற்றும் மாமியார் உயிரிழந்த சிறுமியிடம் அதிக பாசம் காட்டியதாலும், தனது பெண் குழந்தை மாற்றுத்திறனாளியாக இருப்பதால் மன உளைச்சல் மற்றும் பொறாமை ஏற்பட்டதாகவும், அதனாலேயே தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை வீட்டிலிருந்து தூக்கிச் சென்று கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த கொடூரச் சம்பவம் ராமநாதபுரம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்ப உறவுகளுக்குள் ஏற்பட்ட மனநிலைப் பிரச்சினைகள் மற்றும் பொறாமை உணர்வு ஒரு நிரபராத குழந்தையின் உயிரைப் பறித்திருப்பது சமூகத்தில் கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கின் பின்னணி, சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் மற்றும் குற்றச்சாட்டுக்குட்பட்ட பெண்ணின் மனநிலை தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக