அம்பாறை மாவட்டத்தின் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட இரவுநேர சோதனை நடவடிக்கையின் போது, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட பல சாரதிகள் சிக்கியதுடன், 75 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு முச்சக்கர வாகனம் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், வீதி விபத்துகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட சுற்றிவளைப்பு, கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை வரை பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்டது.
சோதனையின் போது, வீதிகளில் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் கட்டம் கட்டமாக நிறுத்தப்பட்டு ஆவணங்கள், சாரதி அனுமதிப்பத்திரம், காப்புறுதி மற்றும் வாகனங்களின் தொழில்நுட்ப நிலை ஆகியவை விரிவாக பரிசோதிக்கப்பட்டன.
விசாரணைகளின் போது, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துதல், காப்புறுதி ஆவணங்கள் இல்லாமல் பயணித்தல், தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுதல், ஒரே மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணித்தல், அதிவேகமாக வாகனம் செலுத்துதல் மற்றும் அதிக இரைச்சல் எழுப்பும் வகையில் மாற்றம் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை இயக்குதல் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
இந்த நடவடிக்கையின் விளைவாக, மொத்தம் 117 போக்குவரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சட்ட விதிகளை மீறிய 75 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு முச்சக்கர வாகனம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸாரின் கட்டுப்பாட்டிற்குள் எடுக்கப்பட்டுள்ளன.
இதனுடன், சோதனையின் போது சாரதிகளுக்கு வீதி பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்குமுறைகள் மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொலிஸார் விழிப்புணர்வு ஆலோசனைகளையும் வழங்கினர்.
பொதுப் போக்குவரத்து சட்டங்களை மீறுபவர்கள் மட்டுமன்றி, சட்டவிரோத கடத்தல், குற்றச்செயல்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளுக்கு வாகனங்களை பயன்படுத்துவோருக்கு எதிராகவும் எதிர்காலத்தில் இன்னும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கல்முனை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வகையான திடீர் சோதனை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், வீதி ஒழுங்கை மீறும் சாரதிகள் மீது எந்தவித தளர்வும் காட்டப்படமாட்டாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக