காலாவதியாகும் நிலையில் உள்ள நெல் கையிருப்பை அரிசியாக மாற்றி, அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் வழங்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக தேசிய விவசாய சம்மேளனத்தின் தலைவர் அனுராத தென்னகோன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள சுமார் 1,15,000 மெட்ரிக் தொன் நெல்லை அரிசியாக மாற்றி, ஒவ்வொரு அரச ஊழியருக்கும் 20 கிலோ கிராம் வீதம் தவணை முறையில் வழங்கும் திட்டம் தொடர்பாக வர்த்தக அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு, அரச சேவையின் கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நெல் கையிருப்பில் இருந்து கிடைக்கும் சுமார் 71,875 மெட்ரிக் தொன் அரிசியை விலங்கு உணவாக மாற்றுவதற்கு முன்னர், அதனை 14 இலட்சம் அரச ஊழியர்களுக்கு கட்டண அடிப்படையில் வழங்குவதன் மூலம் அரசாங்கம் தனது தவறுகளை மறைக்க முயற்சிப்பதாகவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
சந்தையில் அரிசி விலையை கட்டுப்படுத்தவும், புதிய நெல் அறுவடைக்கான கொள்வனவுகளை ஒழுங்குபடுத்தவும் களஞ்சியங்களில் உள்ள நெல்லை உடனடியாக அரிசியாக்கி சந்தைக்கு விடுமாறு விவசாய அமைப்புகள் பலமுறை கோரிக்கை விடுத்திருந்ததாகவும், அதனை அரசாங்கம் கவனிக்காததால் தற்போது அந்த நெல் காலாவதியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரச ஊழியர்கள் பொருளாதார நெருக்கடியில் உள்ளவர்கள் அல்லர் என்றும், அவர்களிடம் இவ்வாறு காலாவதியாகும் நிலையில் உள்ள அரிசியை தவணை முறையில் வழங்கும் நடவடிக்கை அரச சேவையின் கௌரவத்தை பாதிப்பதாகவும் அனுராத தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த பெரும்பாலான அரச ஊழியர்களின் நம்பிக்கையையும் இந்த நடவடிக்கை அவமதிப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக