வருடாந்த பேருந்துக் கட்டண திருத்தத்தின் அடிப்படையில், 15 வீதம் முதல் 20 வீதம் வரை பேருந்துக் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்குமாறு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜூலை மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு எழுத்துமூலமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அடுத்த ஐந்து நாட்களுக்குள் தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கட்டண திருத்தம் தொடர்பாக கலந்துரையாடல் நடத்த எதிர்பார்ப்பதாகவும், அண்மைக்காலமாக டொலர் மாற்று விகிதம் மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட செலவுகள் அதிகரித்துள்ளதால் பேருந்து சேவையை நஷ்டத்தில் இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேருந்துத் தொழில் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்த அவர், அடுத்த ஆறு மாதங்களில் டீசல் விலை குறைந்தாலும் பேருந்துக் கட்டணத்தை குறைக்கும் திட்டம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சுமார் 300 வகையான பேருந்துக் கட்டணங்களிலும் உயர்வு இடம்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், குறைந்தபட்ச பேருந்துக் கட்டணம் 35 அல்லது 40 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும் என்பதே தங்களது எதிர்பார்ப்பு என்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக