மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ், மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தனது திருமணத்திற்கு வெளியேயான உறவுகள் தொடர்பான தகவல்களை பயன்படுத்தி தன்னை அச்சுறுத்தி தனது வட்டாரத்தில் வைத்திருக்க முயன்றதாக அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் மேற்பார்வைக் குழு விசாரணையில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு சிறையில் உயிரிழந்த எப்ஸ்டீனுடன் தனக்கிருந்த தொடர்பு குறித்து, ஜூன் 10ஆம் திகதி நடைபெற்ற மூடிய கதவு விசாரணையில் பில் கேட்ஸ் சாட்சியமளித்துள்ளார். விசாரணை பதிவுகள் வெளியாகியதைத் தொடர்ந்து, எப்ஸ்டீனிடமிருந்து விலக முயன்ற காலத்தில் மறைமுக அச்சுறுத்தல் முயற்சிகள் இடம்பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
தன்னை நேரடியாக மிரட்டும் வகையில் எந்தச் செய்தியும் அனுப்பப்படவில்லை என்றாலும், சில வரைவு மின்னஞ்சல்களின் உள்ளடக்கத்தைப் பார்க்கும்போது, தன்னை எவ்வாறு அச்சுறுத்தலாம் என்பது குறித்து எப்ஸ்டீன் திட்டமிட்டிருந்ததாக தோன்றியதாக கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எப்ஸ்டீனின் குற்றச் செயல்கள் குறித்து தனக்கு முழுமையான அறிவு இல்லை என்றும், அவருடன் தொடர்பு வைத்திருந்தது தனது வாழ்க்கையின் மிகப்பெரிய தவறுகளில் ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எப்ஸ்டீனுடன் தனது தொடர்பு 2011ஆம் ஆண்டு தொடங்கியதாகவும், பின்னர் அந்த உறவை முறித்ததாகவும் அவர் விளக்கியுள்ளார்.
எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் ஒருவரின் பெயர் இடம்பெறுவது மட்டும் அவர் குற்றத்தில் ஈடுபட்டார் என்பதற்கான ஆதாரமாக கருத முடியாது என்றும், இருப்பினும் அந்த ஆவணங்கள் எப்ஸ்டீன் மற்றும் அவரது நெருங்கிய வட்டாரத்துடன் பல்வேறு முக்கிய நபர்களுக்கு தொடர்புகள் இருந்ததை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக