நாட்டில் டெங்கு நோயின் பரவல் தீவிரமடைந்து பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை நாடளாவிய ரீதியில் சுமார் 49,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டின் 14 மாவட்டங்களில் டெங்கு நோய் வேகமாகப் பரவி வருவதாகவும், மொத்த நோயாளர்களில் 25,000-க்கும் அதிகமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் கொழும்பு, மஹரகம மற்றும் தெஹிவளை–கல்கிஸ்ஸ உள்ளிட்ட பல பிரதான மாநகர சபைப் பகுதிகளில் கழிவகற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளமை, நோய் பரவலுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு, கண்டி மற்றும் கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலைகளில் நோயாளர்கள் இரத்தப் பரிசோதனைகளை வெளியில் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வைத்தியசாலைகளின் கொள்ளளவும் சுகாதார ஊழியர்களின் பற்றாக்குறையும் கடுமையான சவாலாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதால், நிலைமை கட்டுப்பாட்டை மீறும் முன்பே நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி விரைவான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக