நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் விலைவாசி உயர்வு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெளிவான விளக்கங்களை வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
கைது நடவடிக்கைகள், குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) விசாரணைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் குறித்து கருத்து தெரிவிப்பதை விட, வாழ்க்கைச் செலவின் உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
வழக்குகள் இருந்தால் சட்டம் தனது கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், எந்தவொரு விசாரணைக்கும் சட்ட நடைமுறைகளுக்கும் தாம் முகங்கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், நீதித்துறையின் மீது தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள குடும்பங்கள் விலைவாசி உயர்வு மற்றும் அன்றாட வாழ்க்கைச் செலவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தின் முழு கவனமும் இந்த பொருளாதாரச் சவால்களுக்கு தீர்வு காண்பதில் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தூய்மையான ஆட்சியை வழங்குவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருவதாகவும், அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள சொத்துக் குவிப்பு மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதையும் அரசாங்கம் விளக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே, கைதுகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த கருத்துக்களை விடுத்து, நாட்டின் பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் ஊழல் தொடர்பான பொதுமக்களின் கவலைகளுக்கு தீர்வு காண்பதில் ஜனாதிபதி அதிக கவனம் செலுத்த வேண்டும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக