சிறுவர்களுக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் தகாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் நிரூபிக்கப்பட்ட நால்வருக்கு, அனுராதபுரம் சிறுவர் குற்றங்களுக்கான சிறப்பு மேல் நீதிமன்றம் மொத்தமாக 101 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
வெறும் 20 நாட்களுக்குள் விசாரணைகளை நிறைவு செய்த நீதிமன்றம், மேல் நீதிமன்ற நீதிபதிகளான சந்துன் விதான மற்றும் ருவன் தம்மிக திஸாநாயக்க ஆகியோரின் அமர்வில் இந்த தீர்ப்பை வழங்கியது. வழக்குகளை சட்டமா அதிபர் சார்பில் அரச சிரேஷ்ட சட்டத்தரணி சமிக குருகே முன்னிலைப்படுத்தினார்.
துறவறப் பயிற்சிக்காக விகாரைக்கு ஒப்படைக்கப்பட்ட சிறுவனை முதல் நாளிலிருந்தே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக குற்றம் நிரூபிக்கப்பட்ட தம்புத்தேகம, ஹுரீகஸ்வெவ, தலாகொலவெவ ஸ்ரீ சம்புத்த வாலுகாராம விகாராதிபதிக்கு 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், 10 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கலென்பிந்துணுவௌ, சிவலாகுலம ஸ்ரீ சீவலி சைத்தியாராம விகாராதிபதிக்கு 24 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன், உறவுமுறையில் தனது 7 வயது சகோதரி சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய கே.எஸ். சுமுது சம்பத் குமார என்பவருக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும், தனது காதலியின் 15 வயது மகளை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்திய மற்றொரு குற்றவாளிக்கு 32 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக