முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் மேலும் இருவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு வழக்கின் விசாரணை எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு நேற்றைய தினம் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவியேற்பு விழாவை முன்னிட்டு 2014 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி இலங்கை முதலீட்டுச் சபையின் நிதியுதவியுடன் 11 பத்திரிகைகளில் துணை விளம்பர அனுபந்தங்களை வெளியிட ஏற்பாடு செய்ததாக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் மற்றைய இருவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் மூலம் அரசாங்கத்திற்கு 1,748,877.76 ரூபாய் நட்டம் ஏற்பட்டதாகவும், அது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாக அமைவதாகவும் ஆணைக்குழு குற்றம் சாட்டியுள்ளது.
கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையின் போது அரசுத் தரப்பு சாட்சிகளிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஜூலை 30 ஆம் திகதி முன்னெடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, வழக்கு அன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக