வவுனியா நகரில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்கள் முன்னெடுத்த அனுமதியற்ற வாகனப் பேரணியின் போது போக்குவரத்து விதிமுறைகள் மீறப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், பல மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், ஒரு மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் வவுனியா புகையிரத நிலைய வீதியில் பெருமளவான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களுடன் மாணவர்கள் இந்த பேரணியை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது வீதியின் ஒரு பகுதியை மறித்து பயணித்ததன் காரணமாக ஏனைய வாகனங்களுக்கும் பொதுமக்களுக்கும் கடுமையான போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், சில மோட்டார் சைக்கிள்களில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய வகையில் மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்கள் பொருத்தப்பட்டிருந்ததுடன், சில மாணவர்கள் ஆபத்தான மற்றும் அதிவேகமான முறையில் வாகனங்களை செலுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று பேரணியில் ஈடுபட்டவர்களை வழிமறித்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அதன் பின்னர், பொதுவீதியில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தல், வாகனங்களில் சட்டவிரோத மாற்றங்கள் செய்தல், ஒலி மாசு ஏற்படுத்தல் மற்றும் ஆபத்தான முறையில் வேகமாக வாகனம் செலுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சோதனையின் போது விதிமுறைகளை கடுமையாக மீறியதாகக் கருதப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறிய பல மாணவர்களுக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான மாணவர் கொண்டாட்டங்கள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையிலும், வீதிப் பாதுகாப்புச் சட்டங்களை மதிக்கும் வகையிலும் இடம்பெற வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம், இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வின் பின்னணியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக