இன்றைய காலத்தில் இளம் வயதினரிடையே கூட மாரடைப்பு அதிகரித்து வரும் நிலையில், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உணவுமுறை மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை ஆகியவை இதய நோய்களுக்கு முக்கிய காரணங்களாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
டாக்டர்கள் பரிந்துரைப்படி, தினசரி உணவுமுறையை சரியாகப் பின்பற்றினால் மாரடைப்பு அபாயத்தை குறைக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. காலை எழுந்தவுடன் டீ, காபி போன்றவற்றை உடனே தவிர்த்து வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது நல்லது என கூறப்படுகிறது.
காலை உணவாக ஓட்ஸ், ராகி உப்புமா, காய்கறிகள், பழங்கள் மற்றும் முட்டை வெள்ளைக்கரு போன்ற ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கி கொழுப்பு அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
மதிய உணவில் கைக்குத்தல் அரிசி அல்லது சம்பா அரிசி, அதிக காய்கறிகள், பருப்பு, மீன் அல்லது கிரில் செய்யப்பட்ட சிக்கன் போன்றவற்றை சேர்ப்பது பரிந்துரைக்கப்படுகிறது. அதிக எண்ணெய் மற்றும் பொரித்த உணவுகளை தவிர்ப்பது அவசியம்.
மாலை நேரத்தில் சர்க்கரை இல்லாத டீ, காபி அல்லது நட்ஸ், பயறு வகைகள் எடுத்துக் கொள்ளலாம். இரவு உணவை குறைந்த அளவில், சீக்கிரமாக எடுத்துக் கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
மொத்தத்தில், சமச்சீரான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாரடைப்பு அபாயத்தை குறைக்கும் முக்கிய வழி என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக